Tuesday, May 14, 2013

[ Findings ]துயரத்துடன் முடிந்த ஓவியரின் வாழ்க்கை ( வான்கா) - Part 2

தொடர்புடைய பதிவு :   பகுதி 1

வான்காவின் ஓவியங்கள் அவரின் மறைவுக்கு பின் அதிகம் பேசப்படுவதற்கும், அதிக விலை போவதற்கும் காரணம் ஓவிய நுணுக்கங்களை விடவும் அதில் உள்ள உண்மை தன்மையும் உணர்ச்சி வெளிப்பாடும் என்று சொல்வது மிகை இல்லை என்று நினைக்கிறேன்.

இவரின் ஓவியங்களின் தூரிகையின் வீச்சு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. போர்ட்ராய்ட் எனப்படும் வகையில் தனது சுய ஓவியத்தை பல வரைந்துள்ளார் அதில் ஒன்று காது அறுபட்ட நிலையில் தன்னை தானே வரைந்து கொண்டது. இன்னொரு ஓவியம் தாடி இல்லாமல் இருக்கும் போது வரையப்பட்டது. இந்த ஓவியம் மட்டும் 1998 நவம்பரில் $71.5 million (டாலர்) விலை போனது அதுவே டிசம்பர் 2011 ல் $98.4 million டாலர் என்பது வியப்பான விசயம்.

இவர் ஓவியனாவதற்கு ஒரு காரணம் இவரின் சகோதரர் தியோ (ஆர்ட் டீலர்), இந்த தொழிலில் பிரகாசிக்கலாம் என்ற அவரின் எண்ணம். இன்னொரு காரணம் காதலாக இருக்கலாம் ஆனால் அந்த காதலே அவரின் உடல் நலக்கேட்டிற்கும் காரணமாக போய்விட்டது வருத்தப்படவைக்கும் தகவல். சகோதரரின் மனைவி ஜோஹனா இவரின் ஓவியங்களுக்கு ஊக்கம் அளித்தவர். அவரின் மறைவிற்கு பிறகு 1901 ல் 71 ஓவியங்களை காட்சிப்படுத்தினார்.

ஓவியங்களில் , 860 ஆயில் பெயிண்டிங்குகள், 1300 வாட்டர் கலர் பெயிண்டிங்குகள் மற்றும் ஸ்கெட்சுகள். இன்னும் காணாமலும் அழிந்தும் போயிருக்கலாம். அநேக பெயிண்டிங்குகளின் விலைகள் அதிகம் பேசப்படுகின்றன.

வருமையின் காரணமாக 15 வயதில் படிப்பை துறந்து வேலை தேடினார். தாய்மொழியாம் டச்சை தவிர ப்ரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் நன்றாக அறிந்திருந்தார்.

மஞ்சள் வீடு அவர் வசித்த வீடு அந்த ஓவியம் நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன்னை “Christ of the Coal Mines” என்று அழைத்துக்கொண்டார்.







   

Friday, May 10, 2013

[ Findings ]துயரத்துடன் முடிந்த ஓவியரின் வாழ்க்கை ( வான்கா)

 

வின்செண்ட் வான்கா நெதர்லாந்தில் பிறந்தவர். கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் எழுத்தராக (clerk) பணிபுரிந்தார்.  சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இன்னும் சில காலம் சமய தொண்டு (preacher) புரிந்தார். இவர் தமது 30 ஆவது வயதிற்கு பின்னாலே ஓவியம் வரைய ஆரம்பித்தார்,  என்பது கவனிக்கத்தக்கது. 1886 ல் பாரிசுக்கு புலம் பெயர்ந்த பின்னர்  ஓவிய புதுமையாளர்கள் அல்லது உணர்வுபதிவுவாத ஓவியர்களுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்ப்பு இவரின் ஓவியங்களை மெருகேற்றியது என்று சொல்லலாம்.  ஜப்பானிய ஓவியங்களின் தாக்கம் இவரிடம் இருந்தது.

இவரின் முதல் ஓவியமான  உருளைகிழங்கு உண்போர்  ஏழை மக்களுடன் பழகியதன் வெளிப்பாடு.

நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வரைந்த இவரால் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே விற்கமுடிந்தது நெருடலான விசயம்.  அவரின் மறைவுக்கு பின்னரே உலக அளவில் மிகச்சிறந்த ஓவியங்களாக இவரது ஓவியங்கள் கணிக்கப்பட்டன.

இறுதி நாட்களில் இவர் மனநோயால் பீடிக்கப்பட்டார். தன் காதுமடல்களை அறுத்துக் கொண்டார். இறுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இறுதியில் 37 ஆம் வயதில் உயிர் நீத்தார்.  இன்றைக்கு அவரது ஓவியங்கள் விலை மதிக்க முடியாதவையாக கருதப்படுகிறது.

"The sadness will last forever." துயரம் என்றும் தொடரும் என்பது இவரின் இறுதி வாக்கியம்.

அவரின் திருவாசகம் :
” I cannot help that my pictures do not sell. Nevertheless the
time will come when people will see that they are worth more
than the price of the paints and my own living”


இவரின் சில படைப்புக்கள் :


மஞ்சள் வீடு
 ஓய்வு அறை Bedroom in Arles, 1888


The Sower, 1888


Starry Night Over the Rhone, (1888)





இன்னும் சில ஓவியங்கள்  மற்றும் தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்..


Saturday, May 4, 2013

பிகாஸோவின் குவர்னிகா - [Findings]


(Guernica) குவர்னிகா எனும் இந்த ஓவியம் 20 ஆம் நூற்றாண்டின் ஒரு புரட்சி படைப்பு என புகழப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த ஓவியத்தை 1937 ல் வரைந்தார். கேன்வாஸில் வரையப்பட்ட இந்த ஓவியம் (ஆயில் பெயிண்டிங்) சுமார் 11 அடி உயரமும் 25 அடி நீளமும் கொண்டது. (மேல் பகுதிகளை ஏணி இல்லாமல் வரைய முடியாது.)  பிகாஸோ பாரிஸ் உலக விழாவில் (செப்.1938) இதை காட்சிப்படுத்தினார்.

இவ்வோவியம் சிம்பாலிசம் என்ற வகைப்பட்டது. போருக்கு எதிரான கொள்கையை சித்தரிக்கிறது. உலகப்போரினால் குவர்னிகா மக்கள் பட்ட துன்பதை, போரின் கொடுமையை,அடக்குமுறையை சாடுகிறது.

ஸ்பெயின் தேசம் நாஜிக்களால்(ஜெர்மனி) விமான குண்டுதாக்குதலுக்குள்ள வரலாற்றை சொல்லுகிறது இவ் ஓவியம்.


பின்னாளில் ஒரு ஜெர்மன் அதிகாரி ”நீங்கள் தான் இதை வரைந்ததா? ”என கேட்டார். அதற்கு பிகாஸோ சொன்ன பதில் “இல்லை..இதை நீங்கள்தான் உருவாக்கினீர்கள்”.




மேலோட்டமாக பார்த்தால் இவ்வோவியத்தின் கூறுகளை புரிந்து கொள்ள முடியாது.

முதலில் நமக்கு தெரிவது கூரையில் எரியும் மின்விளக்கு. இது குண்டு தாக்குதலை சொல்கிறது. ஏற்பட்ட விளைவுகளை காணச் சொல்கிறது பெரிய கண் உருவம். ஞான கண்ணை திறக்க சொல்கிறது. மின் விளக்கின் பின்னே இருளில் சிறகு ஒடிக்கப்பட்ட பறவை.


குரல் வலை நசுக்கப்பட்டு கதறும் குதிரை. அதன் கதறலை வெளித்தள்ளும் நாக்குகள் உணர்த்துகிறது. அந்த குதிரையின் கால்களும் உடைக்கப்பட்டு உள்ளது. எலும்புகளின் சிதறல்கள்..

இறந்த குழந்தையை பதறும் கைகளில் ஏந்தி வானத்தை நோக்கி கதறும் தாய்.



எருது ஸ்பெயினின் கலாச்சார குறியீடு. அதன் முகத்தில் மனிதனின் உருவமும் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது. மாட்டின் வால் தீயின் நாக்குகள்... கொழுந்து விட்டு எரிவதாக காட்டப்பட்டுள்ளது.

தீபற்றி எரியும் வீட்டில் (பின்புல ஜன்னல்) தீ நாக்குகளில் சிக்கிகொண்டு காப்பாற்ற கதறும் பெண். (இவ்வுருவம் பெண்ணாகவும் தெரிகிறது ஆணாகவும் தெரிகிறது)

வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சிப்பாய். கைகளில் உடைந்த வாள். அந்த கையின் பின்புலத்தில் மலர் சமாதானத்தின் குறியீடு. போர் தேவையில்லை என்பதை உணர்த்துகிறது. காலில் நசுக்கப்படும் தலை கவசம்.



திறந்த கதவின் வழியே பறந்து வரும் பெண். கைகளில் அணைத்து பிடித்த விளக்கு போர் அற்ற சூழல் வேண்டும் என்பதன் குறியீடு.




PABLO PICASSO [ 1881–1973 ]


பாப்லோ பிகாஸோ ஸ்பெயின் தேசத்தில் மெலேகா (malaga)வில் பிறந்தவர். பாரிஸில் வாழ்ந்தவர் அதற்கு முன் இளவயதில் பார்ஸிலோனாவில் வளர்ந்தவர். முப்பரிமாண ஓவியங்களின் முன்னோடி. 92 ஆவது வயதுவரை வாழ்ந்தார்.


Popular Posts